Friday, December 17, 2010

ஓட்டுக்கு தரும் காசை கோவில் உண்டியலில் போடுங்க பொன்ராதா கிருஷ்ணன்

ஓட்டுக்கு தரும் காசை
கோவில் உண்டியலில் போடுங்க பொன்ராதா கிருஷ்ணன்

தேர்தலின் போது தி.மு.க.,வினர் ஓட்டிற்கு தரும் பணத்தை வாங்கி, அதை கோயில் உண்டியலில் போடுங்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையைப்போல, தமிழக அரசு இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று, பா.ஜ.,சார்பில் "தாமரை ரதயாத்திரை' நிகழ்ச்சி நடந்தது. இதை துவக்கி வைத்து, அக்கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளாக லட்சக்கணக்கான இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தராமல் இருக்கும் மத்திய, தமிழக அரசுகளை கண்டிக்கிறோம். அதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகை தரக்கூடாது என நாங்கள் கூறவில்லை. அவர்களைப்போல, இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். அது கிடைக்கும்வரை நாங்கள் ஓயப்போவது கிடையாது.


ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தகவல்தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்களது வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.இது நாடகம்தான். அமைச்சர் பதவியில் இருந்தபோதே, ராஜாவை டிஸ்மிஸ் செய்து தி.மு.க., முக்கிய தலைவர்களின் வீட்டில் சி.பி.ஐ., சோதனை செய்திருந்தால் மத்திய மற்றும் தமிழக அரசுகள் பதவியில் இருந்திருக்காது. ஒரே ஆண்டில் எட்டு முறை பெட்ரோல் விலையை உயர்த்தியது ஒன்றே மத்திய காங்., கூட்டணி அரசின் சாதனை.


தமிழகம் உருப்பட வேண்டுமெனில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவுகட்டப்படவேண்டும். தேர்தலில் ஓட்டுக்காக தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில், அது கொள்ளையடிக்கப்பட்ட பொதுமக்களின் பணம். ஆனால், அப்பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிடுங்கள். 60 தலித் சமுதாய குடும்ப நிலங்களை அபகரித்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது புகார் எழுந்துள்ளது, என்றார். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் முரளிதரராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரதயாத்திரை புதியம்புத்தூர், புதுக்கோட்டை, திருச்செந்தூர் வழியாக உடன்குடியை அடைந்தது. இரவு, அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

No comments:

Post a Comment