Friday, December 17, 2010

ஜெயலலிதா சொத்து குவிப்பு- வழக்குமூன்று சாட்சியங்கள் -முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம்

ஜெயலலிதா சொத்து குவிப்பு- வழக்குமூன்று சாட்சியங்கள் -முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம்
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணையில், மூன்று சாட்சியங்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக, முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும், விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்து. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி, தினகரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் 41 சாட்சியங்கள், குறுக்கு விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக தகவல் கொடுத்ததால், அவர்களிடம் மறு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் 41 சாட்சியங்களிடம் மறு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முதல், சாட்சிகளின் மறுவிசாரணை துவங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரு சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும், ஜெயலலிதா தரப்புக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் வாக்குமூலம் கொடுத்தனர்.

நேற்று மூன்று சாட்சியங்கள் மட்டுமே ஆஜராகிருந்தனர். அவர்களிடம் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா விசாரணை செய்தார். சாட்சி ஜோசப் (தனியார் கம்பெனி உரிமையாளர்): என்னுடைய கம்பெனியை விலைக்கு விற்பதற்காக, சுதாகரனிடமிருந்து 20, 20, 10 லட்ச ரூபாய் என மூன்று "செக்'காக 50 லட்சம் ரூபாய் வாங்கினேன். இவர் முதல் விசாரணையில், தற்போது கூறியதை கூறியிருந்தார். ஆனால், இரண்டாம் கட்ட விசாரணையில் சுதாகரனிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கியதாக பல்டியடித்தார். தற்போது முதலில் கூறியதுதான் உண்மை என்றார்.

சாட்சி வின்சன்ட் (டிராவல்ஸ் கம்பெனி உரிமையாளர்): சுதாகரன் திருமணத்திற்கு எனது டிராவல்சில் இருந்து 10 கார்கள் வாடகைக்கு அனுப்பியது உண்மை தான். இவர் முதல் விசாரணையில் இவ்வாறே கூறியுள்ளார். ஆனால், மறு விசாணையில், நான் சுதாகரன் திருமணத்திற்கு கார்கள் வழங்கவில்லை. என்றார்.

சாட்சி ஜலபதிராவ் (திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வாடகைக்கு விடக்கூடியவர்): நான் சுதாகரன் திருமணத்திற்காகத்தான் பொருட்கள் வாடகைக்கு விட்டேன் என்றார். இவரும் முதல் விசாரணையில் தற்போது கூறிய பதிலும், இரண்டாம் கட்ட விசாரணையில் கட்சிக் கூட்டத்திற்காக வழங்கியதாக கொடுத்தாக மாற்றி கூறியவர். தற்போது முதலில் கூறியது சரி என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ""மேலும் சாட்சிகளின் விசாரணை ஜனவரி 3, 4, 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கும்,'' என்று உத்தரவிட்டார்

No comments:

Post a Comment